காலை பதினோரு மணி

காலை பதினோரு மணி
என்னுடைய ஆபீஸ். காலை பதினோரு மணி இருக்கும்.நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன். டேபிளில் இருந்த டெலிபோன் 'கிரர்ர்ர்ர்... கிரர்ர்ர்ர்...' என கிணுகிணுத்தது. அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். பேசிய கீதா ரிசீவரின் வாயை மூடியபடி என்னிடம் நீட்டினாள்."உனக்குத்தான்..." என்றாள்."யாரு...?""மீனலோசனி.."என் இதயத்துடிப்பு பட்டென்று எகிற ஆரம்பித்தது. ஆபீஸ் நம்பருக்கே கால் செய்ய ஆரம்பித்து விட்டாளா? இப்போது என்ன செய்வது..? நான் ஒரு இரண்டு வினாடிதான் யோசித்திருப்பேன்."நான் இல்லைன்னு சொல்லி வச்சிரு.." என்றேன்.கீதா என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்பு மெதுவாக ரிசீவரை தன் காதுக்கு கொண்டு சென்றாள். ஒரு வினாடி காதில் வைத்திருந்தவள் திரும்ப ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்."என்னாச்சு...?" நான் புரியாமல் கேட்டேன்."அவங்களே கட் பண்ணிட்டாங்க.." சொல்லிவிட்டு கீதா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.எனக்கு மனதில் எதுவோ உறுத்தியது. மனசு இப்போது மிகவும் பாரமாக இருந்தது. ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன். எதற்காக இந்த திருட்டுத்தனம். நான் செய்வது சரியா.. தவறா.. மனதில் எழும்பிய கேள்விகள் என்னை குழப்பமடையச் செய்தன. நான் மனம் ஒன்றாமலே மறுபடியும் என் பார்வையை வரை படத்தின் மேல் வீசினேன்.மீனு என்கிற மீனலோசனியை பற்றி தெரிந்து கொள்ளுமுன் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். என் பெயர் அசோக். டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் ட்ராப்ட்ஸ்மேனாக வேலை பார்க்கிறேன். சொந்த ஊர் சேலத்துக்கு பக்கம். கிண்டியில் ஒரு வாடகை வீட்டில் மகேஷ், ரவி, கண்ணன் எனும் இன்னும் மூன்று நண்பர்களோடு வசிக்கிறேன். சென்னைக்கு வரும் முன்னர் அவர்கள் எனக்கு பழக்கமில்லை. சென்னை வந்த புதிதில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்பு நாங்களே தனியாக வீடு எடுத்து தங்கி எங்கள் நட்பை நீட்டித்துக் கொண்டோம். நான்தான் சின்ன கம்பெனியில் சின்ன வேலையில் இருக்கிறேன். அவர்கள் மூவரும் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். கன்னாபின்னாவென்று சம்பாதிக்கிறார்கள்.இந்த மீனு அதே கம்பெனியில் அவர்களை விட அதிக சம்பளம் வாங்குகிறாள். மாதமானால் சுளையாக ஐம்பதாயிரத்துக்கு மேல் பார்க்கிறாள். என் நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். எங்களுடன் கேரம் விளையாடுவாள். டிவி பார்ப்பாள். சினிமாவுக்கு வருவாள். சிரிப்பாள். சண்டை போடுவாள். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் பேசுவாள். கோபம் வந்தால், அழகாக கண்களை உருட்டி முறைப்பாள். இப்போது கொஞ்ச நாளாக என்னை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறாள். அவள் வாய்விட்டு என்னிடம் 'ஐ லவ் யூ' சொல்லாவிட்டாலும் என்னால் யூகிக்க முடிந்திருந்தது. நான் கொஞ்ச நாளாக அவளை அவாய்ட் பண்ணுவதற்கும் அதுதான் காரணம். அவளை பிடிக்காதா என்று கேட்கிறீர்களா? இந்த உலகத்திலேயே அவளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். பின்பு ஏன் அவாய்ட் பண்ணுகிறேன் என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.மீனலோசனி மிக அழகாக இருப்பாள். 'மிக அழகு' என்றால் நான் பார்த்த பெண்களிலேயே மிக அழகு. சந்தனத்தையும் ரோஜாவையும் கலந்து பூசியது போல ஒரு நிறம். பவுர்ணமி நிலவுக்கு பவுடர் போட்டு விட்டது போல ஒரு முகம். பளிங்கில் செய்த கோலி குண்டுகள் போல உருளும் இரண்டு விழிகள். ஆரஞ்சு சுளைகளில் தேனை ஊற்றியது போல இரு இதழ்கள். கோவில் சிற்பத்துக்கு புடவை கட்டிவிட்டது போல ஒரு தேகம். வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி ஒரு மீனலோசனி.இன்னும் கேளுங்கள். அழகு மட்டும் இல்லை. நிறைய படித்திருக்கிறாள். வசதியான வீட்டுப் பெண். எக்கச்சக்க சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனால் தான் பெரிய பணக்காரி என்ற திமிர் துளியளவும் அவளிடம் இராது. அவளிடம் குறை என்று என்னால் ஒன்றை கூட சுட்டிக் காட்ட முடியவில்லை. நான் அவளை அவாய்ட் பண்ணுவதற்கு இதுதான் காரணம். ஒன்றுமே இல்லாத நான் எங்கே? எல்லாம் நிறைந்து இருக்கிற அவள் எங்கே?மீனுவின் நினைவுகள் என்னை வேலையில் கவனத்தை செலுத்தவிடாமல் இம்சை செய்தன. தவறு செய்ய வைத்தன. வேலையில் ஈடுபாடு இல்லாததால் அன்று சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பி விட்டேன். வீட்டை அடையும்போது மணி ஆறு ஆகப் போனது. வீட்டை நெருங்கிய போதுதான் அன்று இந்தியா கிரிக்கெட் மேட்ச் என்று ஞாபகம் வந்தது. இந்நேரம் முடிந்திருக்கும். ரிசல்ட் தெரியவில்லை."மச்சான்... மேட்ச் என்னாச்சுடா...?" என்று நான் உற்சாகமாக கத்திக்கொண்டேதான் கதவை திறந்தேன்.கதவை திறந்ததும், ரவியுடன் எதிரே உட்கார்ந்து கேரம் ஆடிக் கொண்டிருந்த மீனுவை பார்த்ததும் நான் அப்படியே ஆஃப் ஆனேன். அமைதியாக தலையை குனிந்தபடி என் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மீனு ஓரக்கண்ணால் என்னையே பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அறைக்குள் நுழைந்தேன். கண்ணன் கட்டிலில் அமர்ந்து எதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். மகேஷ் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. நான் என் பேக்கை அறையில் வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டேன். முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். தலை வாரிக் கொண்டேன். மீண்டும் மெல்ல நடந்து வாசலுக்கு சென்றேன். செருப்பு மாட்டிக் கொண்டு,"ரவி.. எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்குடா.. போயிட்டு வர்றேன்.." என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே,"இப்போ ஒருத்தனுக்கு செருப்படி விழப் போவுது.."என்று பின்னால் இருந்து மீனு சொல்ல, நான் திரும்பி பார்த்தேன். அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று எனக்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் எதுவும் புரியாதவன் மாதிரி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன்."யாருக்கு மீனு செருப்படி விழப் போவுது..?""ம்ம்ம்ம்... எதுவும் புரியாதவன் மாதிரி நடிக்கிறான் பாத்தியா.. அவனுக்கு.." என்று என்னை முறைத்தபடி சொன்னாள்."எ....என்ன சொல்ற மீனு..? எ....எனக்கு எதுவும் புரியலை.." அவ்வளவுதான்.. மீனு பட்டென சேரில் இருந்து எழுந்தாள். நேரே என்னை நோக்கி வந்தவள், "நடிக்காதடா.. நடிக்காதடா.." என்றவாறு என் கன்னத்தில் 'சப்.. சப்..' என்று அறைய ஆரம்பித்தாள். நான் இரண்டு கையாளும் அவள் அடிப்பதை தடுக்க முயன்றேன். ஆனால் அவள் அறைவதை நிறுத்தவில்லை. நான் என் முகத்தை மூடிக்கொள்ள, மீனு என் முதுகிலும் ரெண்டு அடி போட்டாள். ரவிதான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, ஆத்திரத்துடன் இருந்த அவளை பிடித்து தடுத்தான்."ஐயோ...!! விடு மீனு... என்ன இது சின்னப் பசங்க மாதிரி..."ரவி தடுத்ததும் மீனு சற்று அடங்கினாள். இப்போது நான் அவளை ஏறிட்டு பார்த்தேன். முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவளிடம் கேட்டேன்."இப்போ எதுக்கு என்னை தேவையில்லாம அறையுற..? நான் என்ன தப்பு செஞ்சேன்..?""செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஒன்னுந்தெரியாதவன் மாதிரி நடிக்காத.. எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது.." மீனு கோபம் கொஞ்சமும் குறையாமல் சொன்னாள்."அதான் என்ன செஞ்சேன்னு கேக்குறேன்ல..?""பேசாத.. அப்படியே.. உன்னை அறைஞ்சே கொன்னுருவேன்..""அப்பப்பா.. என்ன நடக்குது இங்க..? மீனு.. எதுக்கு இப்போ இப்படி எமோஷனல் ஆற..? அப்படி என்ன செஞ்சான் இவன்..?"ரவி பொறுமையில்லாமல் மீனுவை கேட்கவும், அவளது முகம் அப்படியே மாறிப் போனது. அவளது கருவிழிகள் கலங்க ஆரம்பித்தன. மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. பற்களால் உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள்."சொல்லு மீனு.. கேக்குறேன்ல..?" ரவி திரும்ப கேட்கவும்,"கொஞ்ச நாளா இவன் என்னை அவாய்ட் பண்ணிக்கிட்டே இருக்கான்டா.. என்கூட சரியா பேசுறதில்லை.. நான் இப்படி வந்தா, இவன் அப்படி போறான்.. மொபைலுக்கு போன் பண்ணுனா எடுக்குறதே இல்லை.. 'ஸாரி இட் வாஸ் இன் சைலன்ட் மோட்' ன்னு சாவகாசமா மெசேஜ் பண்ணுறான்.. இவன் மூஞ்சிய ஒழுங்கா பாத்தே ஒரு மாசமாகப் போவுது.. இதுலாம் பத்தாம.. இன்னைக்கு இவன் பண்ணுன காரியத்துக்கு.." மீனு கோபத்தை அடக்கமுடியாமல் சற்று நிறுத்தினாள்."சொல்லு மீனு.. இன்னைக்கு என்ன பண்ணுனான்..?" ரவி மீனுவை கேட்டான்."நான்லாம் ஒன்னும் பண்ணலை.." என்று நான் பலவீனமாக சொன்னேன்."பேசாத.. உன்னை..." என்று மீனு மறுபடியும் என்னை அறைய கை ஓங்கினாள். ரவிதான் மறுபடியும் தடுத்தான்."ஏய்.. நீ சும்மா இருடா.. அவதான் பேசிக்கிட்டு இருக்கால்ல..?" ரவி என்னை அதட்டினான்."நீ சொல்லு மீனு..." என்று அவளை கேட்டான்."மொபைல் எடுக்க மாட்டேன்றானேன்னு இன்னைக்கு இவன் ஆபீஸ் நம்பருக்கு போன் பண்ணுனேன்.. ஒரு பொண்ணு எடுத்தா.. இவரு இருந்துக்குட்டே.. இல்லைன்னு சொல்ல சொல்லி போனை வைக்க சொல்றாரு.. பெரிய புடுங்கி இவரு.. நம்மகிட்டலாம் பேச மாட்டாரு..""நான் அப்படிலாம் சொல்லலை"நான் சொல்லி முடிக்கும் முன்பே "படார்.. படார்.." என்று என் தலையில் அடி விழ ஆரம்பித்தது. "பொய் சொல்லாத.. பொய் சொல்லாத.." என்றவாறு மீனு என் பிடரியிலே அடித்தாள்."நீ சொன்னதுதான் ஈயத்தை காய்ச்சி ஊத்துன மாதிரி என் காதுல விழுந்துச்சே.. அதான் அவ சொல்றதுக்கு முன்னால நானே கட் பண்ணிட்டேன்.."நான் அதற்கு மேலும் நடிப்பதில் அர்த்தமில்லை என்று அமைதியானேன். ரவி எதையும் நம்பமுடியாமல் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணன் அறைக்குள் இருந்து தலையை நீட்டி, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மீனு அடிப்பதை நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்தாள். அவளது பளிங்கு கண்களில் இருந்து முத்து முத்தாய் கண்ணீர் துளிகள் கிளம்பி, கன்னம் நனைத்து ஓட ஆரம்பித்தன. அவ்வப்போது மூக்கை உறிஞ்சி விசும்பினாள். நான் தொப்பென்று அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்."ஏண்டா அசோக் இப்படிலாம் பண்ணுற..? சொல்லுடா... கேக்குறேன்ல...?" ரவி என்னை கொஞ்சம் அதட்டி கேட்டான்."ஒன்னும் இல்லைடா.. எல்லாம் சும்மாதான்..." என்றேன் நான் என்ன சொல்வதென்று புரியாமல்.மீனு திரும்பி என்னை முறைத்தாள். ரவி சூழ்நிலையை சுமுகமாக்கும் நோக்கத்தோடு சொன்னான்."சரி மீனு.. அவன் எதுக்கோ அப்படி பண்ணிட்டான்... இனிமே அப்படிலாம் பண்ண மாட்டான்.. விடு... நீ தேவையில்லாம எமொஷனலாகாத.."மீனு தன் கண்களை துடைத்துக் கொண்டாள். லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். மெல்ல நடந்து என் அருகில் வந்தாள். குனிந்திருந்த என் முகத்தை அவளுடைய வலது கையால் பிடித்து நிமிர்த்தினாள்."சரி.. வா.. போலாம்.." என்றாள் சாந்தமாக."எங்கே..?" நான் புரியாமல் கேட்டேன்."வான்னு சொன்னா வா.. கெளம்பு..." அவள் குரலில் கோபம் அதிகரித்தது."எனக்கு வேலை இருக்கு.."நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் மீனு "பளார்" என்று அறைந்தாள். ரவி ஓடிவந்து தடுத்தான்."என்ன மீனு..? இப்போதான சொன்னேன்..?" என்றான்."அவனை ஒழுங்கா என் கூட வர சொல்லு ரவி.. இல்லைனா நான் என்ன பன்னுவேன்னே எனக்கே தெரியாது.." மீனு ஆத்திரத்துடன் சொன்னாள்.ரவி இப்போது என்பக்கமாக திரும்பினான்."ஏய்... எழுந்திரிடா.. கெளம்பு.. அவகூட போ.. போடா.. போய் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க.. இப்படி மனசுல இருக்குறதை சொல்லாம வச்சிக்கிட்டு.. எங்க உசுர வாங்காதீங்க..." ரவி எரிச்சலுடன் சொல்லியவாறு என்னை கிளப்பிவிட்டான்."நீ நட மீனு.. அவன் வருவான்..." என்று மீனுவை பார்த்து சொன்னான். மீனு மறுபடியும் ஒரு முறை என்னை முறைத்து பார்த்துவிட்டு, வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல் நானும் அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். வெளியில் வந்த மீனு அங்கு நிறுத்தியிருந்த அவளது ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள். ஸ்டார்ட் செய்தாள். நான் அருகில் சென்றதும்,"ம்ம்.. உக்காரு.." என்றாள். நான் அமைதியாக பின் சீட்டில் அமர்ந்தேன்."இப்போ எங்க போறோம்..?" என்றேன் நான்."வாயை மூடிக்கிட்டு கம்முனு வா..." என்றாள் மீனு, கோபம் கொப்பளிக்கும் குரலில்.சாலையில் ட்ராபிக் குறைவாகவே இருந்தது. சர்தார் படேல் ரோட்டில் ஏறியதும், மீனு வண்டியை விரட்டினாள். என் மேல் இருந்த கோபத்தை அவள் ஆக்ஸிலரேட்டர் மேல் காட்ட, ஸ்கூட்டி பறக்க ஆரம்பித்தது. அவளை கொஞ்சம் மெதுவாக ஓட்ட சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் நான் ஏதாவது பேசினால், நடுரோட்டிலேயே வண்டியை நிறுத்தி என்னை அடிப்பாள் போல தோன்றியது. அதனால் அமைதியாக பின்னால் உட்கார்ந்திருந்தேன்.ஐஸ் ஹவுசை தாண்டியதும் வண்டியை வலப்புறம் திருப்பி ஓரமாக நிறுத்தினாள். நான் இறங்கிக் கொண்டதும், வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, எதுவும் பேசாமல் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். என்ன செய்வது என்று புரியாமல் நான் அவளை பின்தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் நடந்த மீனு, கடலை நெருங்கியதும், மணல் வெளியில் தொப்பென்று அமர்ந்தாள். முழங்கால்களை கட்டிக் கொண்டாள். நானும் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தேன்.மீனு கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. பிரம்மாண்டமான கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். நுரை நுரையாய் பொங்கிய அலைகளை முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பார்த்தாள். பின்பு திடீரென தன் கால்களுக்குள் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அவளது முகுது மேலும் கீழும் ஏறி இறங்க, அவளது விசும்பல் ஒலி கடல் சத்தத்தை மீறி என் காதில் வந்து விழுந்தது. இப்போது என்னால் தாங்க முடியவில்லை. என் இதயம் வலிக்க ஆரம்பித்தது. பதறிப்போய் அவளிடம் சொன்னேன்."ஐயோ...!! என்ன மீனு இது..? எதுக்கு இப்போ அழுகுற..? ப்ளீஸ் மீனு... அழாத...!!""போடா... அழறதுயும் அழ வச்சிட்டு... இப்போ அழக்கூடாதுன்னு சொல்றியா...?" மீனு கண்ணீர் வடியும் முகத்துடன் சொன்னாள்."ப்ளீஸ் மீனு... கண்ணைத் தொடச்சுக்கோ... அழாத... என்னால பாக்க முடியலை..""ஏண்டா இப்படி பண்ணுற..? எதுக்கு என்னை சித்திரவதை பண்ணுற..? கொஞ்ச நாள் முன்னால எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..? இப்போ உன்னால தெனம் தெனம் அழுகுறேன்.. ஏண்டா இப்படி பண்ணுற..? ஏன் என்னை இப்படி உயிரோட கொல்லுற..?""ப்ளீஸ் மீனு... கண்ணை தொடச்சுக்கோ...?""ஏன் இப்படிலாம் பண்ணுறேன்னு சொல்லு...""நீ முதல்ல அழறதை நிப்பாட்டு.. நான் சொல்லுறேன்.. கண்ணை தொடைச்சுக்கோ.. ப்ளீஸ்.."நான் சொன்னதும் மீனு கண்களை துடைத்துக் கொண்டாள். கர்ச்சீப்பை எடுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நிமிர்ந்து என்னை பார்த்தாள்."ம்ம்... சொல்லு..."நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். பின்பு மெல்ல பேச ஆரம்பித்தேன்."நீ... நீ... என்னை லவ் பண்றது எனக்கு தெரியும் மீனு... கண்டுபுடிச்சுட்டேன்..""ஆமாம்.. பெரிய உலக அதிசயத்தை கண்டு பிடிச்சுட்டாரு..? அதான் எல்லாருக்கும் தெரியுமே..? நான் உன்கிட்ட வாய் விட்டு சொன்னது இல்ல.. அவ்வளவுதான..? அதுக்கென்ன இப்போ..?""இது... இந்த லவ்... இது.. வேணாம் மீனு...?"சொல்லிவிட்டு நான் மீனுவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தது."ஏன்...? என்னைய புடிக்கலையா..? என்னை விட நல்ல பொண்ணா எதிர்பாக்குறியோ..?""ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லை மீனு... உனக்கென்ன குறைச்சல்...?""அப்புறம் என்ன...?""நான்தான் உனக்கு பொருத்தமா இருக்க மாட்டேன் மீனு.. நீ வேற யாராவது உனக்கு பொருத்தமா ஒருத்தனை ..""நீ எனக்கு பொருத்தமா இல்லைன்னு யார் சொன்னா..?""ஏன்..? நான்தான் சொல்லுறேன்..""ஏன் அப்படி சொல்லுற..?""என்ன மீனு நீ..? நீ எவ்வளவு அழகா இருக்குற..? எவ்வளவு படிச்சிருக்க..? கை நிறைய சம்பாதிக்கிற..? நல்ல வசதியான வீட்டுப் பொண்ணு.. உனக்கேத்த மாதிரி யாரையாவது.... நீ என்னடான்னா என்னைப் போய் லவ் பண்ணிக்கிட்டு..." நான் படபடவென சொன்னேன்.மீனு கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பின்பு தன் வலது கையை எடுத்து என் கன்னத்தில் வைத்தாள். என் முகத்தை அவள் பக்கமாக திருப்பி காதலுடன் பார்த்தாள்."உனக்கு என்னடா குறைச்சல்..? இந்த உலகத்திலேயே நீதான் என் கண்ணுக்கு அழகா தெரியுற.. படிப்பு என்ன பெரிய படிப்பு..? கவுரமான வேலைல இருக்குற.. கைநெறைய சம்பாதிக்காட்டாலும் ஒரு குடும்பத்தை நடத்துற அளவு சம்பாதிக்கிற.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. எந்த பொண்ணையும் ஏறெடுத்து பாக்க மாட்ட.. ஒரு ஆம்பளைக்கு இதை விட என்ன வேணும்..?"மீனு இந்த உலகத்திலேயே நான்தான் சிறந்த ஆண் என்பது மாதிரி பேச, நான் சற்று திணறிப் போனேன். அவளது கையை என் கன்னத்தில் இருந்து எடுத்து, என் முகத்தை விலக்கிக் கொண்டேன். தலையை குனிந்தபடி சொன்னேன்."அதெல்லாம் சரியா வராது மீனு.. வேணாம் ப்ளீஸ்...""லவ் பண்ணாம… வாழ்ந்து பாக்காம... அது சரியா வராதுன்னு, நீயா எப்படி சொல்லுற..?""சொன்னா கேளு மீனு...""இப்போ என்ன பிரச்னை உனக்கு..?" என மீனு திடீரென கேட்டாள்."பிரச்னையா...? எனக்கு என்ன பிரச்னை..? எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..""உனக்குத்தான் பிரச்னை.. உன் பிரச்னை என்னனு சொல்லு.. நான் உன்னைவிட அதிகமா சமபாதிக்கிறதுதான் பிரச்னையா..? நாளைக்கே நான் வேலையை ரிசைன் பண்ணிறவா...?"மீனு அப்படி கேட்டதும் நான் திகைத்துப் போனேன்."ச்சே.. ச்சே... அதெல்லாம் வேணாம் மீனு...""பின்ன..? நான் பணக்கார வீட்டுப் பொண்ணா இருக்குறதுதான் உன் பிரச்னையா..? எல்லாத்தயும் விட்டுட்டு நாளைக்கே உன்கூட வந்துடவா..?""ஐயையோ... என்ன மீனு பேசுற நீ...? எனக்காக எதுக்கு நீ எல்லாத்தையும் விட்டுட்டு...""சொல்லுடா... நான் என்ன பண்ணனும்..? என்ன பண்ணுனா நீ என்னை லவ் பண்ணுவ..?"மீனுவின் குரல் இப்போது தழுதழுக்க ஆரம்பித்தது. அவள் கண்களில் கண்ணீர் துளி ஒன்று திரண்டு, வழிந்து ஓட ரெடியாக இருந்தது. என் மனதுக்குள் அவள் மீதான காதல் பொங்கி பெருக ஆரம்பித்தது. என்ன பெண் இவள்..? என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னை இப்படி காதலிக்கிறாள்..? எனக்காக எல்லாவற்றையும் விட்டு விட தயாராயிருக்கிறாளே..? எனக்காக இப்படி ஏங்கும் இவளுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்..? இவளை கண்ணீர் சிந்த வைத்ததை விட..? நினைக்க, நினைக்க எனக்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது."வே....வேணாம் மீனு.." நான் பலவீனமாக தலையாட்டி மறுத்தேன்.அவள் அவ்வளவு சொல்லியும் நான் அவளது காதலை மறுக்க, மீனு துடித்துப் போனாள். முட்டிக்கொடிருந்த கண்ணீர் இப்பொது அவளது முகம் நனைத்து ஓட ஆரம்பித்தது. "இன்னும் உனக்கு புரியலைல..? நான் உன்னை எந்த அளவு லவ் பண்ணுறேன்னு உனக்கு புரியலைல..? எப்போடா புரிஞ்சுக்கப் போற..? சொல்லு... எப்போ புரிஞ்சுக்கப் போற..? ஒரு வேளை நான் என் உயிரை விட்டா...?"அவள் சொல்லி முடிக்கும் முன்னே, நான் அவள் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தேன். மீனு அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடி விழுந்த கன்னத்தை பிடித்தவாறு என்னை நிமிர்ந்து பார்த்தாள். நான் பட்டென்று அவளை இழுத்து என் மார்போடு அணைத்துக் கொண்டேன். மீனுவும் இரண்டு கைகளாலும் என் இடுப்பை இறுக்கிக்கொண்டு, சுகமாக என் மார்பில் புதைந்து கொண்டாள். இப்போது என் கண்களிலும் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது."என்ன வார்த்தை சொல்ற மீனு.. நீ போய்ட்டா.. அப்புறம் நான் மட்டும் எப்படி இருப்பேன்..? எனக்கும் உன்னை புடிக்கும் மீனு.. என் உயிரை விட ரொம்ப புடிக்கும்.. என்னைக் கட்டிக்கிட்டு நீ கஷ்டப்படக்கூடாதுன்னுதான் நான் இப்படிலாம் நடந்துக்குட்டேன்.."சொல்லிவிட்டு நான் அவளை மேலும் இறுக்கிக்கொண்டேன். மீனு சத்தம் போடாமல் என் மார்புக்குள் அடங்கியிருந்தாள். இருவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். எனது கண்ணில் இருந்து வடிந்த நீர் மீனுவின் நெற்றியை சுட்டிருக்க வேண்டும். மீனு பட்டென்று எழுந்து கொண்டாள். என் கண்ணீரை ஒற்றை விரலால் துடைதெடுத்தாள். என் முகத்தை இரு கையாளும் தாங்கிக் கொண்டாள். காதல் பொங்க என்னை பார்த்தாள்."உன்னை கட்டிக்கிட்டா நான் கஷ்டப்படுவேனா..? நீ இல்லாட்டாதாண்டா என் உயிரே போய்ட்ட மாதிரி கஷ்டப்படுவேன்.."சொன்ன மீனு பட்டென்று தன் சிவந்த உதடுகளை என் உதடுகளோடு வைத்து பொருத்திக் கொண்டாள். என் மேலுதடு அவளது இதழ்களுக்குள் மென்மையாக அகப்பட்டுக் கொண்டது. நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மீனுவின் மேலிருந்து வந்த இனிய நறுமணமும், மெத் மெத்தென்ற அவளது உதடுகளின் மென்மையும், தேன் போல் இனித்த அவளது உதட்டு ஈரமும் என்னை அசையவிடாமல் செய்தன. நான் விலகத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.மேலே வானம் இருட்டிவிட்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி யாருமில்லை. கடலலைகள் மட்டும் அடங்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. நானும் மீனுவும் எங்கள் உதடுகள் சிக்கிக்கொண்ட நிலையில், உலகை மறந்து அமர்ந்திருந்தோம். எனது தடித்த உதடுகளை, மீனுவின் மெல்லிய பட்டு உதடுகள் உரசி தீமூட்டின. அவளுடைய எச்சில் துளிகள் தேனாய் என்னுள் பாய்ந்தன. தீயும், தேனும் ஒன்றாய் என்னை தாக்க, நான் மெய்மறந்து சிலையாக அமர்ந்திருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்று எனக்கு நினைவில்லை."இங்கே பாரு மாமு.. சூப்பர் பிட்டு ஓடினிகிது.."என்று எங்கள் பின்னால் இருந்து வந்த சத்தத்தை கேட்டதும் இருவரும் விலகிக் கொண்டோம். நான் பின்னால் திரும்பி பார்த்தேன். ஒரு மூன்று பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் முகத்தையும், உடையையும் பார்த்தால் யோக்கியமானவர்களாக தெரியவில்லை. நான் எழுந்து கொண்டேன்."வா மீனு... கெளம்பலாம்.." நான் கைகளை நீட்டிக் கொண்டே சொன்னேன்.
Posted by deepan at 11:27 PM

No comments:

Post a Comment